சிலர் படுத்த உடனே சட்டென தூங்கி விடுவார்கள். சிலருக்கு தூக்கம் என்பது காவேரி ஆறு போல, எப்படிக் கூப்பிட்டாலும் வந்து சேராது.
இப்படி தூக்கம் இல்லாமல் தவிப்பவர்களை பல்வேறு நோய்கள் வந்து வாட்டி வதைக்கும் என அதிர்ச்சியூட்டுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதுவும் சின்ன சின்ன நோய்கள் அல்ல ! பார்கின்ஸன், அல்சீமர் என மருத்துவம் திகிலுடன் அணுகும் பெரிய பெரிய நோய்கள்.
இரவில் அமைதியான தூக்கம் இல்லாமல் படுக்கையை உதைப்பது, அழுவது, இடிப்பது, உடலை முறுக்கிப் பிடிப்பது என பல்வேறு வெளிப்பாடுகளால் இந்த சரியான தூக்கமின்மை அறியப்படுகிறது.
இத்தகைய நிலையில் இருப்பவர்கள் போகப் போக நரம்பு வலுவிழக்கும் பல்வேறு நோய்களுக்குள் நுழைந்துவிடுகின்றனர். அதுவே அவர்களுடைய வாழ்க்கைக்கு மிகப்பெரிய சோகமாய் மாறி விடுகிறது.
அதுவும் ஐந்து வருடங்கள் இத்தகைய சிக்கல் இருந்தால் நோய் பாதிக்கப்படும் அபாயம் 18 விழுக்காடு எனவும், அதுவே பன்னிரண்டு ஆண்டுகள் எனில் 52 விழுக்காடு எனவும் இந்த ஆராய்ச்சி அச்சுறுத்துகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக 93 பேரை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வு தான் இந்த முடிவைத் தந்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ரொனால்ட் போஸ்ட்மா இதைக் குறித்து விளக்குகையில், தூக்கம் மனிதனுடைய வாழ்வின் மிக முக்கியமான செயல் எனவும், இயல்பான நிம்மதியான தூக்கம் இல்லாதவர்கள் மன அளவிலும், உடல் அளவிலும் மாபெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் எனவும் கூறுகிறார்.
நிம்மதியாய் தூங்கினாலே போதும் பல நோய்கள் வராமல் தடுக்கலாம் என்பதே ஒரு ஆனந்தமான தூக்கத்துக்கான அழைப்பிதழ் தானே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக