என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

முடி உதிர்தலும் அவற்றைத் தடுத்தலும்


ஒருவருடைய தனித்தன்மைக்கு அடையாளமாக தெரிவது தலையிலுள்ள முடியே. ஒருவரின் அழகை கூட்டுவதும், முகத்தை எடுப்பாக காட்டுவதும் தலைமுடியே. முடி உதிர்தலும், நரையும் வழுக்கையும் வயோதிகத்தின் அடையாளமாக கருதப்படுவதால் கட்டுமஸ்தான உடலும், உறுதியான

மனமும் உடையவர்கள்கூட தலைமுடியில் தொல்லை என்றவுடன் தவிக்க ஆரம்பிக்கின்றனர்.

பெண்களைவிட ஆண்களுக்கே தலைமுடியின் மேல் அதிக அக்கறை உண்டு. ஆண்களே தலைமுடியை கறுப்பாக்கும் சாயங்களை அதிகம் பயன்படுத்துவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. வீரம் மற்றும் ஆண்மையின் அடையாளமாக தலைமுடி கருதப்படுவதால் காதுவரை முடியை வளர்த்து, முறுக்கு மீசையுடன் திரிவதுண்டு.

 இளமையாக இருக்கும் ஒருவர்கூட, முடி உதிரத் தொடங்கியபின் அல்லது வழுக்கை விழுந்தபின் அல்லது முடி நரைத்தபின் சற்று வயதானவராக தோற்றமளிப்பது நாம் கண்கூடாக காணும் உண்மை. நவீன உலகில் வழுக்கையை மறைக்கும் செயற்கை ரோம கவசங்கள் வந்தாலும் இயற்கையாக ரோமம் முளைக்கும் வாய்ப்பு உண்டு என்றால் அதை விரும்பாதவர் யார்தான் உண்டு.

 ரோமக்கால்களில் பூஞ்சை கிருமிகளின் தாக்குதல், தலையின் மேற்புறமுள்ள தோல்பகுதியில் ரத்த ஓட்டம் குறைவது, வியர்வை துவாரங்கள் மற்றும் ரோம துவாரங்கள் அடைபடுவது, வைட்டமின் பற்றாக்குறை, உப்பு மற்றும் புளிப்பு சுவையை அதிகம் உட்கொள்வது, வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட சாயங்களையும் செயற்கை நுரைக்கும் திரவங்களை தலையில் பூசுவது, அடிக்கடி ரோமத்தின் நிறங்களை செயற்கையாக மாற்றுவது, அறுவை சிகிச்சைக்குப் பின்னரும் கடும் சீதோஷ்ண மாற்றம் கொண்ட வெளிநாடுகளுக்கு அடிக்கடி பிரயாணம் செய்வது, கணினியில் நீண்ட நேரம் கண் மற்றும் தலையின் ரத்தக் குழாய்கள் சூடாகும் வரை பணிபுரிவது, குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையில் நீண்ட நேரம் இருப்பது, பிளாஸ்டிக் போன்ற ஒவ்வாத பொருட்களால் செய்யப்பட்ட தலைக்கவசம் மற்றும் இறுக்கமான தொப்பிகளை அணிவது, ரத்தசோகை, தைராய்டு குறைபாடு, சர்க்கரை நோய் போன்ற ஹார்மோன் தொல்லை மற்றும் பலவித மரபணு காரணங்களாலும் தலையில் முடி சீக்கிரம் உதிரத் தொடங்கி வழுக்கை உண்டாகிறது.

 தலைமுடி உதிரத் தொடங்கும் பொழுதே அதன்மேல் கவனம் செலுத்தி, முடி உதிர்தலை கட்டுப்படுத்த வேண்டும். ரத்தசோகை மற்றும் வைட்டமின் குறைபாட்டை சீர்செய்ய வேண்டும். முடியை நுண்ணோக்கி மற்றும் வேதி ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் வளர்ச்சித்தன்மை மற்றும் கிருமித் தாக்கலை சோதனை செய்து, அதன் அடிப்படையில் உள் மற்றும் வெளி மருந்துகளை பயன்படுத்தினால் முடி உதிர்தலை தவிர்க்கலாம். ஒரே வெப்பநிலையுடைய தண்ணீரில் குளிக்க வேண்டும். திடீர் திடீரென குளிர்ந்த நீர், வெந்நீர் என மாற்றுவதால் முடி சீக்கிரம் உதிரத் தொடங்கும். முடி உதிர்தலை குறைத்து, ரோம வளர்ச்சியை தீவிரப்படுத்தும் கரிசாலை, பொன்னாங்கண்ணி, அரைக் கீரை, முருங்கை, பசலை ஆகியவற்றை உணவில் அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.

 நுண்கிருமிகளால் பாதிக்கப்பட்ட ரோமக் கால்களை சுத்தம் செய்து, உதிர்ந்த இடங்களிலும்கூட முடியை நன்கு வளரச்செய்யும் அற்புத மூலிகை காட்டுச்சீரகம். சென்ட்ராத்தெரம் ஆன்தல்மென்டிகம் என்ற தாவரவியல் பெயர்கொண்ட அஸ்டரேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்தச் செடிகள் மலைப்பகுதிகளில் அதிகம் விளைகின்றன. காட்டுச்சீரகத்தில் உள்ள வெர்னாஸ்டீரால், சென்ட்ராத்தெரம், சென்ட்ராத்தெரின், டெல்டா-7-ஏவனேஸ்ட்ரால் போன்ற வேதிச்சத்துகள் தோலின் ரத்தக்குழாய்களை விரிவடையச்செய்து, அவற்றில் தங்கியுள்ள நுண்கிருமிகளை வெளியேற்றி, வியர்வை துவாரங்கள், கொழுப்பு கோள துவாரங்கள் மற்றும் ரோமக்கால் துவாரங்களின் அடைப்பை நீக்கி, ரோம வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றன. அது மட்டுமின்றி பல தோல் நோய்களையும் நீக்குகின்றன.

காட்டுச்சீரகத்தை எலுமிச்சம் பழச்சாறு விட்டு மைய அரைத்து, முடி உதிர்ந்த இடங்களிலும், பூச்சி வெட்டுள்ள இடங்களிலும் தடவி, 15 நிமிடங்கள் ஊறவைத்து குளித்துவர, முடி முளைக்கும். காட்டுச்சீரகத்தை மைய இடித்து, தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, தலையில் தடவி வந்தாலோ அல்லது சாதாரண தேங்காய் எண்ணெயில் காட்டுச்சீரகத்தை ஊறவைத்து தலையில் தடவிவந்தாலோ முடி உதிர்தல் நீங்கி, முடி உதிர்ந்த இடங்களிலும் நல்ல வளர்ச்சி உண்டாகும். அனைவரும் பயன்படுத்தக்கூடிய எளிய கைமுறை மருந்தாகும்

கருத்துகள் இல்லை: