என்னை பின்பற்றுபவர்கள்

அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
அழகாக இருக்க!- 12 வழிகள்!




1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

முடி உதிர்தலும் அவற்றைத் தடுத்தலும்


ஒருவருடைய தனித்தன்மைக்கு அடையாளமாக தெரிவது தலையிலுள்ள முடியே. ஒருவரின் அழகை கூட்டுவதும், முகத்தை எடுப்பாக காட்டுவதும் தலைமுடியே. முடி உதிர்தலும், நரையும் வழுக்கையும் வயோதிகத்தின் அடையாளமாக கருதப்படுவதால் கட்டுமஸ்தான உடலும், உறுதியான

மனமும் உடையவர்கள்கூட தலைமுடியில் தொல்லை என்றவுடன் தவிக்க ஆரம்பிக்கின்றனர்.

பெண்களைவிட ஆண்களுக்கே தலைமுடியின் மேல் அதிக அக்கறை உண்டு. ஆண்களே தலைமுடியை கறுப்பாக்கும் சாயங்களை அதிகம் பயன்படுத்துவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. வீரம் மற்றும் ஆண்மையின் அடையாளமாக தலைமுடி கருதப்படுவதால் காதுவரை முடியை வளர்த்து, முறுக்கு மீசையுடன் திரிவதுண்டு.

 இளமையாக இருக்கும் ஒருவர்கூட, முடி உதிரத் தொடங்கியபின் அல்லது வழுக்கை விழுந்தபின் அல்லது முடி நரைத்தபின் சற்று வயதானவராக தோற்றமளிப்பது நாம் கண்கூடாக காணும் உண்மை. நவீன உலகில் வழுக்கையை மறைக்கும் செயற்கை ரோம கவசங்கள் வந்தாலும் இயற்கையாக ரோமம் முளைக்கும் வாய்ப்பு உண்டு என்றால் அதை விரும்பாதவர் யார்தான் உண்டு.

 ரோமக்கால்களில் பூஞ்சை கிருமிகளின் தாக்குதல், தலையின் மேற்புறமுள்ள தோல்பகுதியில் ரத்த ஓட்டம் குறைவது, வியர்வை துவாரங்கள் மற்றும் ரோம துவாரங்கள் அடைபடுவது, வைட்டமின் பற்றாக்குறை, உப்பு மற்றும் புளிப்பு சுவையை அதிகம் உட்கொள்வது, வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட சாயங்களையும் செயற்கை நுரைக்கும் திரவங்களை தலையில் பூசுவது, அடிக்கடி ரோமத்தின் நிறங்களை செயற்கையாக மாற்றுவது, அறுவை சிகிச்சைக்குப் பின்னரும் கடும் சீதோஷ்ண மாற்றம் கொண்ட வெளிநாடுகளுக்கு அடிக்கடி பிரயாணம் செய்வது, கணினியில் நீண்ட நேரம் கண் மற்றும் தலையின் ரத்தக் குழாய்கள் சூடாகும் வரை பணிபுரிவது, குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையில் நீண்ட நேரம் இருப்பது, பிளாஸ்டிக் போன்ற ஒவ்வாத பொருட்களால் செய்யப்பட்ட தலைக்கவசம் மற்றும் இறுக்கமான தொப்பிகளை அணிவது, ரத்தசோகை, தைராய்டு குறைபாடு, சர்க்கரை நோய் போன்ற ஹார்மோன் தொல்லை மற்றும் பலவித மரபணு காரணங்களாலும் தலையில் முடி சீக்கிரம் உதிரத் தொடங்கி வழுக்கை உண்டாகிறது.

 தலைமுடி உதிரத் தொடங்கும் பொழுதே அதன்மேல் கவனம் செலுத்தி, முடி உதிர்தலை கட்டுப்படுத்த வேண்டும். ரத்தசோகை மற்றும் வைட்டமின் குறைபாட்டை சீர்செய்ய வேண்டும். முடியை நுண்ணோக்கி மற்றும் வேதி ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் வளர்ச்சித்தன்மை மற்றும் கிருமித் தாக்கலை சோதனை செய்து, அதன் அடிப்படையில் உள் மற்றும் வெளி மருந்துகளை பயன்படுத்தினால் முடி உதிர்தலை தவிர்க்கலாம். ஒரே வெப்பநிலையுடைய தண்ணீரில் குளிக்க வேண்டும். திடீர் திடீரென குளிர்ந்த நீர், வெந்நீர் என மாற்றுவதால் முடி சீக்கிரம் உதிரத் தொடங்கும். முடி உதிர்தலை குறைத்து, ரோம வளர்ச்சியை தீவிரப்படுத்தும் கரிசாலை, பொன்னாங்கண்ணி, அரைக் கீரை, முருங்கை, பசலை ஆகியவற்றை உணவில் அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.

 நுண்கிருமிகளால் பாதிக்கப்பட்ட ரோமக் கால்களை சுத்தம் செய்து, உதிர்ந்த இடங்களிலும்கூட முடியை நன்கு வளரச்செய்யும் அற்புத மூலிகை காட்டுச்சீரகம். சென்ட்ராத்தெரம் ஆன்தல்மென்டிகம் என்ற தாவரவியல் பெயர்கொண்ட அஸ்டரேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்தச் செடிகள் மலைப்பகுதிகளில் அதிகம் விளைகின்றன. காட்டுச்சீரகத்தில் உள்ள வெர்னாஸ்டீரால், சென்ட்ராத்தெரம், சென்ட்ராத்தெரின், டெல்டா-7-ஏவனேஸ்ட்ரால் போன்ற வேதிச்சத்துகள் தோலின் ரத்தக்குழாய்களை விரிவடையச்செய்து, அவற்றில் தங்கியுள்ள நுண்கிருமிகளை வெளியேற்றி, வியர்வை துவாரங்கள், கொழுப்பு கோள துவாரங்கள் மற்றும் ரோமக்கால் துவாரங்களின் அடைப்பை நீக்கி, ரோம வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றன. அது மட்டுமின்றி பல தோல் நோய்களையும் நீக்குகின்றன.

காட்டுச்சீரகத்தை எலுமிச்சம் பழச்சாறு விட்டு மைய அரைத்து, முடி உதிர்ந்த இடங்களிலும், பூச்சி வெட்டுள்ள இடங்களிலும் தடவி, 15 நிமிடங்கள் ஊறவைத்து குளித்துவர, முடி முளைக்கும். காட்டுச்சீரகத்தை மைய இடித்து, தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, தலையில் தடவி வந்தாலோ அல்லது சாதாரண தேங்காய் எண்ணெயில் காட்டுச்சீரகத்தை ஊறவைத்து தலையில் தடவிவந்தாலோ முடி உதிர்தல் நீங்கி, முடி உதிர்ந்த இடங்களிலும் நல்ல வளர்ச்சி உண்டாகும். அனைவரும் பயன்படுத்தக்கூடிய எளிய கைமுறை மருந்தாகும்

முகப்பருவுக்கு


பருவுக்கு வீட்டிலேயே ஒரு முதலுதவி. வசம்பு, கொத்தமல்லிவிதை, பாச்சோடி (இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்) இவை மூன்றிலும் தலா 25 கிராம் எடுத்து கொண்டு, கழுவி சுத்தம் செய்யுங்கள். மூன்றையும் தண்ணீர் விட்டு அரைத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். ஒரு மணி நேரம் காய வைத்து பிறகு குளிர்ச்சியான தண்ணீரில் கழுவி விடுங்கள். தொடர்ந்து இப்படி செய்துவந்தால் முகப்பரு காணாமல் போகும். முகப்பருவை தொடாதீங்க, கிள்ளாதீங்க முக்கியமான விஷயம் இது.
பன்னீர் பேஸ் வாஷ்!
15 மிலி தரமான பன்னீரை எடுத்து கொண்டு, முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடுங்கள். தொடர்ந்து சில நாட்கள் இப்படி செய்து வந்தாலும் பரு போய்விடும்.

மல்டிபொடி பேஸ்பேக்!
வேப்பிலை பொடி, புதினா பொடி, துளசிப் பொடி இவைகளை தலா ஒரு டீஸ்பூன் எடுத்து கொண்டு, முல்தான்மட்டி கால் டீஸ்பூன் சேர்த்து, மிதமான சுடுத் தண்ணீர் சேர்த்து மேற்கொண்ட பொடிகளை சந்தனம் போல் குழைத்து முகத்தில் தடவவும். கண்களுக்கு அடியில் கண்டிப்பாக தடவக்கூடாது. 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிவிடவும். தொடர்ந்து சில நாட்கள் இப்படி செய்துவந்தால் பரு பறந்துவிடும்.

பருவிற்கு மருந்துப்பொடி!
பொஅருகம்புல் டி, குப்பைமேனி இலைப்பொடி இரண்டையும் சம அளவு கலந்து, பருவின் மேல் மருந்து போல போட்டு இரவில் தூங்கி, காலையில் அலம்புங்கள். தொடர்ந்து செய்தால் பரு மறையும்.


பத்து பன்னீர் ரோஜா மொட்டுக்களை எடுத்து அது நனையும் அளவு சூடான தண்ணீர்விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அந்த நீரை வடிகட்டி முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊறவிட்டு, பின்னர் முகம் கழுவவும். இப்படி தொடர்ந்து செய்துவர பரு போகும்.

மேற்சொன்னவைகள் சாதாரணமாக சின்ன சின்ன காரணங்களால் தோன்றும் முகப்பருவிற்கான ட்ரீட்மென்ட்தான். பக்க விளைவுகள் இல்லாதது. இதிலும் சரியாக வில்லையென்றால் மருத்துவரை நாடுவதுதான் சிறந்தது.

தயிர் உடலுக்கு நல்லதா? கெடுதலா?

உணவில் தயிர் சேர்த்து கொள்வது நல்லதா? பால் பருகுவது நல்லது. ஆனால் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். என்ன காரணம்?

தயிர் புளிப்பு சுவை கொண்டது. மலத்தைக் கட்டும். மார்பில் சளியை உண்டாக்கும். உஷ்ண வீரியம் உடையது. உடலில் கொழுப்புச் சத்து, மலம், கபம், பித்தம், விந்து, ஜீரண சக்தி ஆகியவற்றை அதிகரிக்கும். உடலில் வீக்கத்தை உண்டுபண்ணும். தயிருக்கு சில மருத்துவ குணங்களும் உண்டு. சுவையிழந்த நாக்கிற்கு சுவை ஊட்டும். குளிருடன் கூடிய முறைக் காய்ச்சல், நீர்ச் சுருக்கு போன்ற நோய்களுக்கு தயிர் பயன்படும். தயிருக்கு இது போன்ற சில குணங்கள் இருந்தபோதிலும் அதைப் பயன் படுத்தும்போது நிறைய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

இரவில் தயிரைப் பருகக் கூடாது. சூடாக்கியும் பயன் படுத்தக்கூடாது. மழைக்காலங்களில் மட்டும் தான் தயிரைப் பயன்படுத்தலாம். தயிர் உஷ்ண வீரியம் உடையதால் உஷ்ண பருவங்களில் தயிரை பருகக் கூடாது. "தயிர் மிகவும் குளிர்ச்சி. கோடைக் காலத்தில் அவசியம் தயிர் பருக வேண்டும்" என்று தவறான கருத்தில் இதைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், குளிர் காலத்தில் கூட பகலில் மட்டும், பாசிப் பயிறு, தேன்(Honey), நெய்(Ghee), சர்க்கரை(Sugar), நெல்லிக்கனி போன்ற ஏதாவது ஒன்றுடன் சேர்த்துத் தான் பருக வேண்டும். தனியாகப் பயன்படுத்தக் கூடாது.

குளிர் காலத்தில் தயிரை தினந்தோறும் பயன்படுத்துவது உடலுக்கு கெடுதலை விளைவிக்கும். சரியாக தோயாத அல்லது அரைகுறையாக மூன்று, நான்கு மணி நேரங்களில் தோய்ந்த தயிரைப் பருகுவது பெரும் கெடுதலை விளைவிக்கும். இந்த விதிமுறைகளை மீறி தினமும் தயிர் சாப்பிட்டால், காய்ச்சல், ரத்தபித்தம், அக்கி, தோல் நோய்கள், சோகை, தலைசுற்றல், உடல் வீக்கம், பெரும்பாடு போன்ற கொடிய நோய்கள் தோன்றும். உடல் நலத்தில் அக்கறை உள்ளவர்கள் தினமும் தயிர்(Curd) சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டியது மிக மிக அவசியம்

நல்ல குரல்வளத்துக்கு



நீர்பிரம்மி கொடி வகையைச் சார்ந்தது. நீர் நிலை ஓரங்களில் படர்ந்து வளரும். இதன் இலை பூண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது.

இது இனிப்பு, துவர்ப்புத் தன்மை கொண்டது. இந்தியா எங்கும் பரந்து காணப்படும். மலேசியா, இந்தோனேசியா, பர்மா, இலங்கை நாடுகளிலும் காணப்படுகிறது.

Tamil - Neer brammiEnglish - Thyme leaved gratilo
Malayalam - Neer brahmi
Telugu - Sambrani chetta
Sanskrit - Brahmi
Botanical Name - Bacopa monnieri
நீர்பிரம்மி செடியில், ஸ்டீரால் மற்றும் Herpestine, Brahmine என்னும் ஆல்கலாய்டுகளும், Bacoside A, Bacoside B ஆகிய குளுக்கோசைடுகளும் உள்ளன.

நினைவாற்றலைத் தூண்ட:
பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஞாபக மறதி ஒரு பெரும்பிரச்சினையாகவே இருந்து வருகிறது. ஞாபக மறதி ஒரு தொற்று நோய்க்குச் சமமாகும். இதனை போக்கும் அருமருந்துதான் நீர்பிரம்மி. நீர்பிரம்மி இலைகளை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து தினமும் காலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

நரம்புத் தளர்வு நீங்க:
மூளையை தலைமையிடமாகக் கொண்டு உடலெங்கும் பின்னிப் பிணைந்து காணப்படும் நரம்புகள்தான் மனித செயல்பாட்டுக்கு முக்கிய காரணமாகின்றன. இந்த மெல்லிய நரம்புகளில் சில சமயங்களில் மன அழுத்தம், கோபம் காரணமாக ஆங்காங்கு நீர் கோர்த்துக்கொள்ளும். மேலும் வெப்பப் பகுதியில் வேலை செய்பவர்களின் நரம்புகளும் பாதிக்கப்படும். நரம்புகள் பலமாக இருந்தால்தான் உடல் புத்துணர்வுடன் செயல்படும். இத்தகைய நரம்பு தளர்வு நீங்க பிரம்மி இலைகளை உலர்த்தி கசாயம் செய்து அருந்திவருவது நல்லது.

சிறுநீர் பெருக:
ஒரு மனிதன் ஆரோக்கியமாக செயல்பட அவன் தினமும் 3 லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும். அதுபோல் அவன் தினமும் 1 லிட்டர் முதல் 1 1/2 லிட்டர் வரை சிறுநீரை வெளியேற்ற வேண்டும். சிறுநீர் சீராக வெளியேறினால் தான் உடலில் உள்ள தேவையற்ற பொருட்கள் வெளியேறும். இவை வெளியேறாமல் நின்றுவிட்டால் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடும். சிலருக்கு சிறுநீர் வெளியேறாமல் நீர் எரிச்சல் உண்டாகும். இவர்கள் நீர்ப்பிரம்மி இலைகளை கசாயம் செய்து அருந்தி வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.

மலச்சிக்கல் நீங்க:
மலச்சிக்கல், மனச்சிக்கல் ஆதி நோய்கள். மலச்சிக்கலைப் போக்கினாலே உடல் ஆரோக்கியம் பெறும். சிலருக்கு எளிதில் செரிமானமாகக்கூடிய உணவு சாப்பிட்டாலும் மலம் எளிதில் வெளியேறாது.
இவர்கள் நீர்பிரம்மி இலைகளை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் மலச்சிக்கல் தீரும்.
நீர்பிரம்மி இலைகளை சாறு பிழிந்து நெய் சேர்த்து காய்ச்சி கொடுத்து வருதல் நல்லது அல்லது நீர்பிரம்மி சாறுடன் 8 கிராம் கோஷ்டத்தை பொடித்து சேர்த்து தேன் கலந்து கொடுத்து வந்தால் புளிச்ச ஏப்பம் நீங்கும்.

நல்ல குரல்வளம் கிடைக்க:
நீர்பிரம்மி இலைகளை வெண்ணெயில் பொரித்து சாப்பிட்டு வந்தால் தொண்டைக் கம்மல் தீருவதுடன் நல்ல குரல்வளம் கிடைக்கும்.
உச்சரிப்பு சரிவராத குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம். இதன் வேரை அரைத்துக் கொதிக்க வைத்து நெஞ்சில் பூச கோழைக்கட்டு நீங்கும்.
நீர்பிரம்மி இலைகளை சிற்றாமணக்கெண்ணெய் விட்டு வதக்கி, வீக்கங்களுக்கு ஒற்றடமிட்டு அதையே அவ்வீக்கங்களின் மீது வைத்துக் கட்டிவர வீக்கங்கள் கரையும்.
நீர்பிரம்மியை பயன்படுத்தி நீண்ட ஆரோக்கியத்தைப் பெறுவோம்.

முடி உதிர்வதைத் தடுக்க வேண்டுமா?




இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலு‌ம் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது.
முடி என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது. ஆனால், அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது.
இ‌ந்‌நிலை‌யி‌ல், முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையை தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.
சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.
சரி, முடி உதிர்வதைப் பார்த்தோம், நரை போக்க வழி பார்த்தோம். முடி வளர வழி இருக்கிறதா? ஆம் அதுவும் இருக்கிறது நம் இயற்கை மருத்துவத்தில்.
கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும்.
இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.
இவையனைத்திற்கும் மேலாக, சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு ஒரு குறிப்பு.
கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய மார்பகம் குறித்து முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பது அவசியம்



என்ன அளவு? என்ன நிறம்? என்ன வடிவம்? என ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய மார்பகம் குறித்து முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பது அவசியம். இதோடு முன் கூட்டியே கண்டறியும் பரிசோதனைகளையும் மேற்கொண்டால் எந்தவொரு நோயையும் ஆரம்ப கட்டத்திலேயே எளிதில் கண்டுபிடித்து குணப்படுத்திவிட முடியும்.ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கிற்குப் பிறகு உங்கள் மார்பகத்தைக் கண்ணாடி முன் நின்று நீங்களே பரிசோதித்துப் பார்த்துக் கொள்வது நல்லது.சிலருக்கு மாதவிலக்கு நாட்களுக்கு முன்பாக மார்பகம் இறுகிய நிலையை அடையக்கூடும்.இதனால் அவர்கள் ஒருவித அசௌகர்யத்தையும், கனத்தையும் உணரக்கூடும்.இந்த நேரத்தில் சுயபரிசோதனை மேற்கொண்டால் தேவையற்ற பயத்தையும்,பதற்றத்தையும் மட்டுமே அவை உருவாக்கும்.எனவே மாதவிலக்கு முடிந்தபிறகு சோதித்துப் பார்ப்பதே சாலச்சிறந்தது.
கண்ணாடி முன்னால் நின்று கைகளை உயர்த்தி மார்பகம் எப்படி அசைகிறது என்று பாருங்கள். கைகளை பக்கவாட்டில் நகர்த்தி தலையை உயர்த்தி இந்த சோதனையை செய்து பாருங்கள். உங்களுக்கு இயல்பான நிலை எது என்பதைத் தெரிந்து கொள்ள இது மிகவும் அவசியம். அதன் பிறகு இந்த அசைவுகளின் போது ஏதாவது அசௌகரியமாகத் தோன்றினால் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். மார்பகத்தின் வடிவத்தில் என்ன மாற்றம் தென்படுகிறது?எங்காவது வீக்கம் தெரிகிறதா? 
தோலில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா?மார்புக்காம்பு உள்நோக்கி இழுத்துக் கொண்டது போலத் தெரிகிறதா என்பனவற்றையும் தெரிந்துகொள்ள பழகிக் கொள்ளுங்கள்.
உங்கள் மார்பகத்தை நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்ப்து மிகவும் முக்கியமானதுதான்.சிலருக்கு மாதவிலக்குக்கு முந்தைய நாட்களில் மார்பகங்கள் சற்று வலிப்பது போலத் தோன்றும். அதற்குப் பிறகு வலி குறைந்து பிறகு இல்லாமல் போய் விடும். மாதவிலக்கு சுழற்சியில் அவை எப்படியான மாற்றத்தை அடைகின்றன என்பதையும் நன்கு புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் மார்பகத்தை சுயபரிசோதனை செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.
1. மார்பகத்தின் வெளிச்சுற்று அல்லது வடிவத்தில் ஏதேனும் புதிதாகத் தென்படுகிறதா? கைகளை அசைக்கும் போது மடிப்புகள் அல்லது குழிவு போல் ஏதேனும் தென்படுகிறதா?
2. இரண்டு மார்பகங்களில் ஏதேனும் ஒன்றில் வலியோ, அசௌகரியமோதென்படுகிறதா? அந்த நிலை சில வாரங்களுக்குத் தொடர்ந்து நீடிக்கிறதா? 
3. ஒரு மார்பகத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இல்லாத ஒரு அம்சம் இன்னொரு மார்பில் தென்படுகிறதா?
4. மார்புக் காம்பில் இருந்து ஏதாவது திரவக்கசிவு ஏற்படுகிறதா?
5. மார்புக் காம்பில் இருந்து ரத்தக் கசிவு அல்லது அதைச் சுற்றிய பகுதியில் ஏதேனும் சிவந்து தடித்து காணப்படுகிறதா?
6. மார்பு நுனியின் அமைப்பில் ஏதேனும் மாற்றம் தென்படுகிறதா? உள்பக்கமாக குழிந்தது போலவோ, வேறு திசையில் இழுத்துக் கொண்டு இருப்பது போலவோ தென்படுகிறதா?
இயல்புக்கு மாறாக புதிதாக எந்தவொரு மாற்றம் தென்பட்டாலும் அதனை உடனே மருத்துவரிடம் சொல்லி ஆலோசனை பெறுவது நல்லது. 
மாதவிலக்கு தொடர்பான அறிவுரைகளைப் போலவே மார்பகம் தொடர்பான இத்தகைய அறிவுரைகளையும் பெண் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுவது மிகவும் அவசியம்.பெண்கள் தாங்களே மாதாந்திர பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதனால் வாழ்வின் பல்வேறு காலகட்டத்தில் மார்பில் ஏற்படும் மாற்றங்களை நன்கு புரிந்து கொண்டு பயமில்லாமல் வாழமுடியும்.

வாழ வைக்கும் வைட்டமின்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும்.
அதனால், என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய்வரும் என்பது பற்றி பார்ப்போம் :
வைட்டமின் `ஏ’ :
இது குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ’ அதிகம் காணப்படுகிறது.
வைட்டமின் `பி’ :
இது குறைந்தால் வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் வைட்டமின் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.
வைட்டமின் `சி’ :
இது குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடு முஞ்சியாக காணப்படுவர். எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும். ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
வைட்டமின் `டி’ :
வைட்டமின் `டி’ இல்லாவிட்டால் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும். போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் உடலே வைட்ட மின் `டி’யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் `டி’ அதிகம் உள்ளது.
வைட்டமின் `ஈ’ :
இது குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் `ஈ’ சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.

தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும் பூண்டு




பூண்டு. வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தோட்டப் பயிர். இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது. ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சைனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.

 பலன்கள்:
பிளேக் முதல் சார்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகள் வரை அழிக்கும் திறன் கொண்டது. சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும். மூட்டு வலியைப் போக்கும். வாயுப் பிடிப்பை நீக்கும்.
ஒரு 100 கிராம் பூண்டில் தண்ணீ­ர்ச் சத்து 62.0 விழுக்காடும், புரோட்டின் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு, நார்ச்சத்து 0.8 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் உள்ளது. கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லி கிராமும் சிறிதளவு வைட்டமின் பி குரூப்களும் உள்ளன. பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே.

பூண்டின் இன்றியமையாத பயன்கள்:
பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும். பால்+பூண்டு+தேன் கலவையை தினமும் பருகி வர வயிற்றுக் கடுப்பு குணமாகும். அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு நல்லது.
 காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்­ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். நோய் சரியானவுடன் இப்பூண்டுப் பாலை நிறுத்திவிட வேண்டும். ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள் இந்தப் பூண்டுப் பாலினை சாப்பிட அவர்களின் மூச்சுத் திணறல் ஓரளவு சரியாகும்.
 பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சுலபமாக வெளியேறிவிடும். மற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும். நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் அவை தானாகவே வெளியேறிவிடும்.
பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும். கேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் ஒரு முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.
நம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும்.
 நரம்புத் தளர்ச்சியாலும், வயோதிகத் தன்மையாலும் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாதவர்கள் பூண்டினை உணவுடன் அதிகளவு சேர்த்துக் கொள்ள இல்லற வாழ்வு இனிதாகும்.

தேன் மருத்துவம்



தேன் என்ற வார்த்தையைக் கேட்டாலே அனைவரின் நாவிலும் எச்சில் ஊறும். இயற்கையின் கொடைகளில் தேனும் ஒன்று. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நம் சித்தர்கள் தங்களின் தவப்பயனால் கண்டறிந்த சித்த மருத்துவத்தில் தேனை துணை மருந்தாக பயன்படுத்துகின்றனர். தேன் எத்தனை வருடங்கள் ஆனாலும் கெடாது. தன்னுடன் சேர்ந்த பொருட்களையும் கெடாமல் பாதுகாக்கும்.
சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்தலாம். தேனில் குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற சர்க்கரை பொருட்கள் உள்ளன.
தேனில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு தேனுக்கும் தனித்தனி மருத்துவ குணங்கள உண்டு.
மலைத்தேன்
இது மலைப் பகுதிகளில் பாறைகளின் இடுக்குகளிலும் பெரிய மரக் கிளைகளிலும் பெரும் கூடாக கட்டியிருக்கும். இந்த வகைத் தேன் அரிய மருத்துவ குணங்களைக் கொண்டது. சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
நாள்பட்ட சளி, இருமல் போன்றவற்றிற்கும் உடலை வலுப்படுத்தவும், நோயுற்றவர்களுக்கு உடல் நலம் பேணவும் மலைத்தேன் சிறந்த மருந்தாகும். நல்ல குரல் வளத்தைக் கொடுக்கக்கூடியது.
கொம்புத்தேன்
மரங்களின் பொந்துகளில் கூடு கட்டும். இந்த தேனீக்கள் சிறிய கொசுவைப் போல் காணப்படும். இந்த வகையான தேன் கிடைப்பது மிகவும் அரிது.
புற்றுத்தேன்
கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.
மனைத்தேன்
இது வீடுகளில் கட்டுகின்ற தேன். பசியினைத் தூண்டும். உடலை வலுவாக்கும். கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
பொதுவாக தேன் சிறந்த கிருமி நாசினி. புண்களை ஆற்றும். நெருப்பினால் உண்டான காயங்களை குணப்படுத்தவும், கொப்புளங்கள் ஏற்படாமல் இருக்கவும் இது பயன்படுகிறது.
நல்ல தூக்கத்திற்கு
இரவு படுக்கைக்கு செல்லும்முன் தேன் 2 ஸ்பூன் பாலிலோ, அல்லது நீரிலோ கலந்து அருந்திவந்தால் நல்ல சுகமானஉறக்கம் வரும்.
தேன் பற்களில் உண்டாகும் மஞ்சள் கறைகளை போக்கும். பற்களுக்கு பலம் தரும். 
தேனை தினமும் பல், ஈறுகளில் தடவி வந்தால் பற்கள் சுத்தமாகவும், பளிச்சென்று காணப்படும். பல் ஈறுகளில் நுண் கிருமிகள் வளருவதைத் தடுக்கும்.
தேனை வாய்புண் மீது தடவினால் புண்கள் விரைவில் குணமாகும். வயதானவர்களுக்கு தேன் உடல் வலிமையையும் சக்திøயயும் கொடுக்கும்.
நீண்ட நாள் சளி நீங்க
பூண்டு எண்ணெய்.     1 ஸ்பூன்
தேன் 3 ஸ்பூன் 
கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தி வந்தால் சளித்தொல்லை நீங்கும் .
தேனை அதிக அளவு எடுத்து குடிக்கக் கூடாது. சிறிது சிறிதாக எடுத்து உள்ளங்கையில் வைத்து நாவினால் நக்கி சாப்பிட்டால் உமிழ் நீருடன் தேன் சேர்ந்து உடலுக்குள் செல்கிறது.
முகப் பொலிவிற்கு
2 ஸ்பூன் தேன் எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் முகத்தில் உள்ள கழிவுகள் வெளியேறும். முகம் பொலிவு பெறும். (தேனை தடவும்போது ரோமத்தில் படாதவாறு தடவவேண்டும். ரோமத்தில் பட்டால் ரோமம் வெளுத்துப் போகும்)
வறண்ட சருமம் மென்மையாக
தேன் 1ஸ்பூன்
பால் 1 டம்ளர்
இரண்டையும் குளிக்கும் நீரில் கலந்து குளித்து வந்தால் மேனி மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும்.
தேன் 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் பன்னீர் 100மிலி கலந்து தோலின் மீது தடவினால் தோல் பளபளக்கும்
புதுத்தேன்
நிறைந்த ஆயுளையும் அழகையும் கொடுக்கும் இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் நெஞ்சில் கபம் உண்டாகும்.
பழைய தேன்
· இது புளிப்பும் இனிப்புமாயிருக்கும் இதனால் வாதப் பெருக்கம், வயிற்றெரிச்சல் உருவாகும்.
· தேன் மருந்துகளுக்கு சிறந்த அனுபானமாக துணை மருந்தாக பயன்படும்.
· தேன் இதயத்திற்கு ஒரு சிறந்த மருந்து. இது மார்புவலி படபடப்பு ஆகியவற்றிற்கு நல்லது.
· தேன் எளிதில் சீரணமாகும். எனவே செரியாமையைத் தீர்க்க கிடைத்த வரப்பிரசாதம்.
· தேன் இரைப்பையில் அதிக அமிலம் சுரப்பதை குறைக்கும். பசியின்மையை, வாய் குமட்டல், நெஞ்செரிச்சல் குணமாகும்.
· இது சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு குடலில் உள்ள கழிவு பொருட்களை வெளியேற்றும்.
வெதுவெதுப்பான நீர் 1/2 டம்ளர் எடுத்து அதில் தேன் 1 ஸ்பூன், எலுமிச்சை பழச்சாற்றை சிறிது கலந்து காலையில் அருந்த வயிறு எரிச்சல் குணமாகும். மலச்சிக்கல் தீரும்.
· இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகப்படுத்த தேனே சிறந்த மருந்தாகும்.
· தேனில் அதிகளவு இரும்புச் சத்து, செம்பு, மாங்கனீசு உள்ளது. வெளுப்பு நோயைக் குணமாக்கும்.
· நுரையீரல் சம்பந்தமான நோய்களைக் குணமாக்கும்.
· இது சிறந்த கோழையகற்றி. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு சிறந்தது.
· ஆஸ்துமா நோயாளிகள் 1 டம்ளர் வெதுவெதுப்பானவெந்நீரில் 1 ஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் வறட்டு இருமல் ஆஸ்துமா குணமாகும்.

பெண்ணைப் படியுங்கள்..!

நம்ம ஊர் சினிமாக் கவிஞர்கள் பலரும், பெண்ணை புத்தகமாக வர்ணித்து ஏகப்பட்ட கவிதைகளை ஏக்கர் கணக்கில் எழுதியுள்ளனர். இதற்கு விமர்சனங்களும் கூட எழுந்துள்ளன.

ஆனால் நிஜமாகவே பெண் ஒரு புத்தகம்தான். அவரது முகத்தைப் பார்த்து நிறைய படிக்கலாம் என்கிறது நியூ சயின்டிஸ்ட் இதழில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வு முடிவு.

பெண்ணின் முகத்தில் ஏகப்பட்ட உணர்வுகளை பார்க்க முடியும். அவர் சோகமாக இருக்கிறாரா, சந்தோஷமாக இருக்கிறாரா, எதையாவது நினைத்துக் கொண்டிருக்கிறாரா, அவரை நம்பலாமா, கூடாதா, கடவுள் நம்பிக்கை கொண்டவரா .. இப்படி ஏகப்பட்ட மேட்டர்களை ஒரு பெண்ணின் முகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாமாம்.

ஆனால் ஆம்பளைஸ் முகத்தைப் பார்த்தால் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாதாம். காரணம் ஆண்களின் முகத்திற்கு இப்படி உணர்ச்சிகளை, உணர்வுகளை வெளிக்காட்டும் திறமை கிடையாதாம்.

இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக ஒரு ஆயிரம் ஆண், பெண்களை எடுத்துக் கொண்டனர். அவர்களின் புகைப்படங்களை இணையதளத்தில் இடம் பெற வைத்தனர்.

ஏற்கனவே அவர்கள் குறித்த தகவல்களை வாங்கி வைத்துக் கொண்டனர். இது தவிர புகைப்படங்களைப் பார்த்து கருத்து சொல்வோருக்காக கேள்விகளையும் தயார் செய்தனர்.

பின்னர் புகைப்படங்களை இணையதளத்தில் பிரசுரித்து, அந்தப் பெண்களின் முகங்களைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேள்வி கேட்டிருந்தனர். இந்த இணையதளத்திற்கு கிட்டத்தட்ட 6500 பேர் வருகை தந்து அதில் இடம் பெற்றிருந்த பெண்களின் முகத்தைப் பார்த்து அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள், அவர்களைப் பார்த்தால் எப்படித் தோன்றுகிறது என்பதைத் தெரிவித்திருந்தனர்.

73 சதவீதம் பேர் பெண்களை அதிர்ஷ்டசாலிகள் என்று தெரிவித்தனர். 70 சதவீதம் பேர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் என கூறியிருந்தனர்.

பெண்களை நம்பலாம் என கூறியிருந்தவர்கள் 54 சதவீதம் பேர்.

ஆனால் அந்தப் புகைப்படங்களுடன் இணைக்கப்பட்டிருந்த ஆண்கள் குறித்து யாருமே சரியாக கணிக்க முடியவில்லையாம்.

ஆண்களை விட பெண்களின் முகம் மிகவும் இன்ஃபர்மேட்டிவ் ஆனவை. இதனால்தான் எளிதில் அவர்களுடைய குணாதிசயங்கள் குறித்து கணிக்க முடிகிறது என்று முடிக்கிறது அந்த ஆய்வு.

எல்லாம் சரி, நாளைக்கு காலையில் நம்மை மனைவி முறைத்துப் பார்க்கும்போது 'லைட்'டாக அடிப்பாரா அல்லது துரத்தி துரத்தி அடிப்பாரா என்பதை கணி்க்க முடியுமான்னு புரிஞ்சுக்க டிரை பண்ணுவோம்..