இன்று நாம் சந்திக்கும் ரத்தக் கொதிப்பு, இதயநோய், உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் எல்லாம் ஒரு நூறு வருடத்திற்கு முன்பு கிடையாது. ஏனெனில் அவர்கள் இயற்கையுடன் இழைந்து வீழ்ந்து, இயற்கையான உணவு களையும், கை குத்தல் அரிசியும் சாப்பிட்டனர்.
ஐரோப்பிய நாகரிகத்தின் வளர்ச்சியினால் உணவை பதப்படுத்துதல், அதை பாதுகாத்தல் என்ற பெயரில் அதிலுள்ள சத்துக்கள் குறைவதுடன், அதன் ருசியை அதிகரிக்க கொழுப்பு, உப்பு சேர்க்கத் துவங்கி, அந்த கலாச்சாரம் இன்று உலகெங்கும் தலை விரித்து ஆடுகிறது. ஆரோக்கிய சீரழிவை ஏற்படுத்துகிறது.
நம் நாட்டில், அதிக கலோரி உள்ள கோலா பானங்கள், வறுவல்கள், சிறு குழந்தைகளையும் அடிமையாக்கி, ஆரோக்கியத்தை கொல்கிறது. இதனை உணர்ந்துதான் 1980களின் நடுவில் இத்தாலியில் "ஸ்லோபுட்'' என்ற இயக்கம் துவக்கப்பட்டது. அதன் அடிப்படையே அந்தந்த ஊர் மக்கள் அவர்கள் ஊரில் கிடைக்கும் ப்ரெஷ்ஷான காய்கறி, பழ வகைகளையும் தானியங்களையும் உண்ண வேண்டும் என்பதுதான்.
அந்தந்த ஊரில் விளைந்த விளையும் பயிர்களுக்கு மீண்டும் உயிர் கொடுப்பதுடன் பாரம்பரிய சமையல் முறைகளை ஊக்கு வித்து மக்களை ஜங்புட் எனப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலிருந்து விடுவிப்பதே இதன் நோக்கம். குழந்தைகளையும், வளரும் சமுதாயத்தையும் குறி வைக்கும் இதன் நோக்கம் வருங்கால தலைமுறை நோயின்றி வாழ வேண்டும் என்பது.
இரண்டாவதாக, அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்கள் உபயோகப்படுத்த வேண்டும். சற்றே பின்னோக்கி பார்த்தால் நம் முன் னோர்கள் பின்பற்றிய முறையும் இதுதான். அவரவர் ஊரில் அரிசி முதல் காய்கறிவரை எந்த ரசாயன உரமும் இன்றி விளைவித்து உண்டதால், நோய் நொடி எட்டிப்பார்க்க வில்லை.
இன்று நாம் நெல்லூர் அரிசி, பஞ்சாப் கோதுமை, ஆந்திரா மிளகாய் என பல இடங்களிலும் பல விதத்திலும் விளைந்த உணவுகளை உண்டதால், அவை வேறு இடத்தில் வளர்ந்ததால் நம் உடம்புடன் ஒத்துப்போவதில்லை. வேறு இடங்களில் விளையும், பழ வகைகள், காய்கறிகள், நம்மிடத்திற்கு வருவதற்குள் அதிலுள்ள உயிர்ச்சத்துக்கள் கழிந்து போய் நாம் உண்பது வெறும் சக்கை தான்.
இதற்கு அதிக விலை வேறு தருகிறோம். உதாரணமாக காஷ்மீர் ஆப்பிள் பல நூறு கிலோ மீட்டர் கடந்து உங்கள் டேபிளுக்கு வரும்போது அதன் சுவையும் சத்தும் குறைந்து விடுகிறது. அதற்கு பதில், நீங்கள் உங்கள் ஊர் வாழைப்பழம் சாப்பிட்டாலே போதும், உயிர்ச்சத்து கிடைக்கும். அதிக செலவுமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக