பிடித்ததைச் செய்யாவிட்டால் வாழ்க்கை "டல்"தான்!
நமக்குப் பிடித்த கலையை வளர்த்துக் கொள்ளாவிட்டால், வாழ்க்கை இருண்டு போகும். இது உண்மை. அன்றாட வாழ்க்கையில் 99 சதவீதம் கடமைகளை நிறைவேற்றுவதிலேயே செலவிடும் போக்கு நம்மிடம் உள்ளது. நமக்கென்று ஒரு நிமிடமாவது செலவழிக்கும் போது தான் நம்மை நாம் உணரத் துவங்குவோம். 99 சதவீத நேரத்தைக் கடமையாற்றச் செலவிடுவதைச் சற்றே தளர்த்தி, கடமைகளை நேரமறிந்து செய்து, நமக்கென்று நேரத்தை ஒதுக்கி தினமும் சந்தோஷம் கண்டால், வாழ்க்கை இனிக்கும்.
மாதத்திற்கு ஒரு நாள் "ரொட்டீனுக்கு" லீவு!
மாதத்திற்கு ஒரு நாள் ரொட்டீன் வாழ்க்கைக்கு "டாட்டா" சொல்லி உங்கள் குடும்பத்தினருடன் வெளியில் சென்று விடுங்கள். சினிமா, டிராமா என்று பார்க்கச் சென்றால், அவற்றின் கதைக்குள் "புகுந்து கொண்டு மனம் வெளியில்" வர மறுக்கும். இப்படி நேரத்தை வீணடிக்காமல், பார்க், பீச், கோயில், உங்களுடன் மனம் விட்டுப் பழகும் உறவினர் வீடு என்று செல்லலாம்.
இவை எதுவுமே போரடித்தால் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கி விடுங்கள். உங்களை அறியாமல் புத்துணர்வு கிடைக்கும்.
பாட்டு பாட பிடிக்குமா? அரை மணி நேரம் ஒதுக்குங்கள்!
சிலருக்கு வாய் விட்டுச் சத்தமாய் பாடுவது பிடிக்கும். வேலை செய்தபடியே பாடுவது கை வந்த கலையாக இருக்கும். ஆனால், வேலையைக் "கோட்டை விட்டு" பாடுவது ஆபத்து. இதிலும் திறமையுடன், அதிலும் ஜமாய்க்கலாம் என்றால் பிரச்னை இல்லை.
பாட்டு கேட்க மட்டும் பிடிக்கும் என்று சொல்பவர்கள், ரேடியோவில் பாட்டு கேளுங்கள். "டிவி" வேண்டாம்.
இனிப்பு பலகாரம் செய்யுங்க!
சிலருக்கு சமைப்பது ரொம்பவே பிடிக்கும். மனசு பாரமாக இருந்தால், அன்று ஏதாவது ஒரு இனிப்பு செய்து சாப்பிடுங்க. அதுவும் செய்யப் பிடிக்கவில்லை எனில், ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிடுங்க. அவசரமாய் உள்ளே தள்ளாமல் சிறிது எடுத்து நாக்கின் நுனியில் வைத்து அதன் முழு ருசியையும் அனுபவித்துச் சாப்பிடும்போது மனசு பாரமும் ஐஸ்கிரீம் போல் கரைந்து விடும்.
ஆரஞ்சு கலர் உடை உடுத்திக் கொண்டால்...
உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்? சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம்? எதுவாக இருந்தாலும் ஆரஞ்சு நிற உடையை எப்போதும் கைவசம் வைத்திருங்கள். உங்கள் தோல் நிறம் எதுவாக இருந்தாலும் போரடிக்கும் போது ஆரஞ்சு நிற உடையை உடுத்திக் கொண்டால், உங்களை அறியாமல் மனம் துள்ளத் துவங்கும்.
உடற்பயிற்சி செய்யுங்க!
தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்தால், நாள் முழுதும் சுறுசுறுப்பாகவே இருப்போம்.
தூங்கி வழியும் பேர்வழிகளுக்கு இது கை கண்ட மருந்து. செய்யத் துவங்கும் வரை தான் சோம்பல்; செய்யத் துவங்கி விட்டால், மனமும், உடலும் புத்துணர்வு பெறும்.
குழந்தை பெற்றவர்கள் அவர்களுடன் கொஞ்சி மகிழலாம்!
திருமணமாகிக் குழந்தை பெற்றவர்கள், ஒரு நாள் முழுதும் அவர்களுடன் கொஞ்சி மகிழ்ந்து, அவர்களது தேவையைப் பூர்த்தி செய்யலாம். இதில் கிடைக்கும் சந்தோஷம் கடலைப் போன்றது.
இது போன்று, உங்களுக்கென பல விஷயங்களில் அக்கறை செலுத்தினால் சோர்வுக்கும், சோகத்துக்கும் "டாட்டா" சொல்வீர்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக